Thursday, June 30, 2011

நெய் சாதம்

தேவையான பொருட்கள்:
               புலவு அரிசி
               பச்சை மிளகாய் - 20 
               வெங்காயம் - 50 கிராம் 
               பச்சை கொத்துமல்லி - ஒரு கட்டு 
               பாதாம் பருப்பு - 4 
               பிஸ்தா பருப்பு - 10 
               தேங்காய் ஒரு மூடி
                பட்டை ஒரு துண்டு
                வெங்காயம் - 10 
                கிராம்பு - 10 
                நெய் - 200 மில்லி
                உப்பு தேவையான அளவு 
        அரிசியை ஊற வைத்து கொள்ள வேண்டும்.
         தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ள வேண்டும்.
         பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் மல்லி தழையையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
         பாதாம் பருப்பு, பிஸ்தா இரண்டையும் சேர்த்து மையாக அரைத்து கொள்ள வேண்டும்.
         ஒரு பாத்திரத்தில் நெய்யை விட வேண்டும்.
          நெய் காய்ந்ததும், பட்டை, ஏலம், கிராம்பு போட்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட வேண்டும்.
           அவை வதங்கியதும், அரைத்த பொருட்களை போட்டு சற்று நேரம் கிண்ட வேண்டும்.
           பிறகு அரிசியை போட்டு புரட்டி, தேங்காய் பாலும் நீருமாக இரண்டு லிட்டர் ஊற்றி வேக விட வேண்டும்.     
 

 

பட்டாணி சாதம்

 தேவையான பொருட்கள்:
                  ரவை  -  500 கிராம் 
                  சேமியா  - 500 கிராம் 
                  பச்சை பட்டாணி இரண்டு கரண்டி
                  நெய் ஒரு கரண்டி 
                  கடுகு அரை ஸ்பூன் 
                  பச்சை மிளகாய் மூன்று 
                  உளுத்தம் பருப்பு முக்கால் ஸ்பூன்
                  இஞ்சி சிறு துண்டு
                  எலுபிச்சம் பழம் ஒன்று
                  மஞ்சள் போடி கால் ஸ்பூன்
                  கறிவேப்பிலை சிறிதளவு
                   உப்பு தேவையான அளவு 
        ரவையையும் சேமியாவையும் சம அளவு எடுத்து கொண்டு, அவற்றை நெய்யில் வறுத்து கொள்ள வேண்டும்.
        வாணலியில் நெய் விட்டு, முந்திரி பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
         பிறகு, பச்சை பட்டாணியை தோல் உரித்து, அதில் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
         நீர் கொதி வந்ததும், ரவை, சேமியா இரண்டையும் போட்டு, நெய் ஊற்றி, கறிவேப்பிலையை கிள்ளி போட வேண்டும்.  கடைசியாக எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு கொள்ள வேண்டும்.
         பட்டாணி சாதத்துடன் ரொட்டி  துண்டுகள் சேர்த்தும் செய்வது உண்டு.  நீர் கொதித்து, ரவை, சேமியாவை போட்டு கிளறும்போது, ரொட்டி துண்டுகளையும், சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.

Sunday, June 26, 2011

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:
                   மெல்லிய ரக அரிசி - 500 கிராம் 
                    தக்காளி - 200 கிராம் 
                    தேங்காய் ஒரு மூடி 
                    இஞ்சி சிறு துண்டு
                    பூண்டு 8 பற்கள்
                    சீரகம் ஒன்றரை ஸ்பூன் 
                    வெங்காயம் - 50 கிராம் 
                    பச்சை மிளகாய் ஏழெட்டு
                    பட்டை சிறு துண்டு
                    ஏலக்காய் ஐந்து
                    கிராம்பு ஐந்து 
                    நல்லெண்ணெய் - 100 மில்லி 
                    உப்பு தேவையான அளவு 
         தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ள வேண்டும்.  தக்காளியை வெட்டி வைத்து கொள்ள வேண்டும். 
          இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.  வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை இலேசாக தட்டி அரைத்து கொள்ள வேண்டும். 
          பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ச்ச வேண்டும். 
           எண்ணெய் காய்ந்ததும், பட்டை, ஏலம், கிராம்பு, ஆகியவற்றை போட்டு பொரிக்க வேண்டும்.  பொரித்தும், அரைத்த பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகத்தை போட்டு வதக்க வேண்டும்.  வாசனை வந்ததும், தக்காளி பழ துண்டுகளை போட வேண்டும்.
           தக்காளி நன்றாக வதங்கியதும், தேங்காய் பாலும், நீருமாக ஒரு லிட்டர் ஊற்றி, அரிசியை போட்டு வேக விட வேண்டும்.

எள்ளு சாதம்

தேவையான பொருட்கள்: 
                     எள்ளு - 250 கிராம்
                     அரிசி - 400 கிராம் 
                     உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் 
                     மிளகாய் வற்றல் எட்டு
                     பெருங்காயம் கொட்டை பாக்கு அளவு 
                      எண்ணெய் ஒரு கரண்டி
                      நெய்  இரண்டு ஸ்பூன் 
                       பச்சை மிளகாய் ஆறு
                       உப்பு தேவையான அளவு 
           எள்ளு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவைகளை வறுத்து, உப்பு சேர்த்து, நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
           எண்ணெயையும், நெய்யையும் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் இவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும். 
           சாதத்தை ஆற வைத்து, அதன் மீது எள்ளு பொடியை தூவி, தாளித்து வைத்துள்ளதையும் கொட்டி கலந்து கொள்ள வேண்டும்.  தாளிக்கும் போது சிறிதளவு கறிவேப்பிலையையும் கிள்ளி போட்டு கொள்ள வேண்டும்.              

மாங்காய் சாதம்

தேவையான அளவு :
                      பச்சரிசி  -  400 கிராம்
                      மாங்காய் துருவல் - 100 கிராம்
                      கடுகு - 10 கிராம்
                      பச்சைமிளகாய் - 10  கிராம்
                      நல்லெண்ணெய் - 100 கிராம்
                      முந்திரி பருப்பு - 15 கிராம்
                      தேங்காய் துருவல் - 50 கிராம்
                       மஞ்சள் தூள் சிறிதளவு
                       காயம் சிறிதளவு
                       உப்பு தேவையான அளவு
        அரிசியை சாதமாக சமைத்து அகன்ற ஒரு தட்டில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்.
        சாதம் ஆறிய பிறகு, மாங்காய் துருவலை அதில் போட்டு கொள்ள வேண்டும்.
        தேங்காய் துருவலுடன், கடுகு, மிளகாய், உப்பு ஆகியவற்றை மையாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததையும் சாதத்துடன் சேர்த்து, மஞ்சள் தூள் கலந்து, நன்கு கிளறி விட்டு கொள்ள வேண்டும்.
         வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், காயம், கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டி, நன்கு கிளறி கொள்ள வேண்டும்.
  

Saturday, June 25, 2011

சாம்பார் சாதம்

தேவையான அளவு :
               அரிசி அரை கிலோ அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
               துவரம் பருப்பு   - 125 கிராம் 
               காய்ந்த மிளகாய்  - 10 கிராம்
               கொத்தமல்லி விதை  -  ஒரு தேக்கரண்டி 
               கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
               வெந்தயம் - அரை தேக்கரண்டி
               காயம் - சிறு துண்டு 
               புளி - எலுமிச்சம் பழ அளவு 
               எண்ணெய் - 400 மில்லி அளவு
               கடுகு - அரை தேக்கரண்டி
               உப்பு - தேவையான அளவு 
               கறிவேப்பில்லை கொஞ்சம்.
     துவரம் பருப்பை தனியாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
     மூன்றில் ஒரு பங்கு மிளகாயை எடுத்து வைத்து விட்டு, மிச்சமிருக்கும் மிளகாய், கொத்துமல்லி விதை, கடலை பருப்பு, காயம், வெந்தயம், துவரம் பருப்பு கொஞ்சம் முதலியவற்றை எண்ணெய் விட்டு, வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
      புளியை கரைத்து, அந்த புளி நீரில் பொடி செய்து வாய்த்த மசாலாவை கரைத்து, உப்பும் சேர்த்து, அரிசி - பருப்புடன் கலந்து கொள்ள வேண்டும்.
      எல்லாவற்றையும் ஒன்று சேரும் விதத்தில் நன்றாக கிளறி விட்டு சற்று குழைவாக வேக விட வேண்டும்.  
      வாணலியில் எண்ணெய் விட்டு, மீதி மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாதத்துடன் சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.
       சாம்பார் வெங்காயம் 400 கிராம் அளவு பருப்புடன் சேர்த்து வேக வைத்து கொண்டால், சாம்பார் சாதம் மேலும் ருசியாக இருக்கும்.            

தேங்காய் சாதம்

பச்சரிசி 200 கிராம் எடுத்து சாதம் சமைத்து வைத்து கொள்ள வேண்டும்.  
             ஒரு பெரிய மூடி தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
              வாணலியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய்  விட்டு, ஒரு தேக்கரண்டி  கடுகு, நான்கு மிளகாய் வற்றல், ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, சுண்டைகாய் அளவு பெருங்காயம் ஆகியவற்றுடன் தேங்காய் பூவையும் சேர்த்து, எல்லா பொருட்களும் சிவந்து வறுபட்டதும், சாதத்தில் கொட்டி கொள்ள வேண்டும்.  தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.

தயிர் சாதம்

பச்சரிசி 200 கிராம் எடுத்து சாதம் சமைத்து வைத்து கொள்ள வேண்டும்.  
              சாதத்தில் 200 மில்லி அளவு கெட்டி தயிர், 100 மில்லி அளவு பால் ஆகியவற்றை விட வேண்டும்.  அத்துடன் ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்க்க வேண்டும். 
              நான்கு பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, சிறு மாங்காய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி போட வேண்டும்.  சிறிது கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட வேண்டும்.
              வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 50 கிராம் முந்திரி பருப்பு, சிறிது பெருங்காயம், இரண்டு மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்து, சாதத்தில் கொட்டி, நன்றாக கிளறி வைத்து கொள்ள வேண்டும்.

எலுமிச்சம்பழ சாதம்

தேவையான பொருட்கள்

எலுமிச்சம்பழம் - பெரியதாக இருந்தால் - ஒரு பழமும், பாதி பழமும் - சிறிய பழமாக இருந்தால் இரண்டு பழமும்
மஞ்சள் பொடி - இரண்டு சிட்டிகை 
நெய் அல்லது நல்லெண்ணெய்  - 100 கிராம்
கடுகு - ஐந்து கிராம் 
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு  - இருபது கிராம் 
கடலைபருப்பு - இருபது கிராம்
பச்சைமிளகாய் - பத்து கிராம்
கறிவேப்பிலை கொஞ்சம்.

அரிசியை நல்ல பக்குவமாக எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, ஆற விட வேண்டும். 
எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து, உப்பையும் மஞ்சள் பொடியையும் போட்டு சேர்த்து சாதத்தில் கொட்டி கலக்க வேண்டும். 
பிறகு, நெய் அல்லது எண்ணெயை காய வைத்து, கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, இவற்றை போட்டு தாளித்து, பச்சை மிளகாயை வகுந்து போட்டு வதக்கி, சாதத்தில் கொட்டி, நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

Sunday, January 23, 2011

சர்க்கரைப்  பொங்கல் 

தேவையான பொருட்கள்

பச்சரிசி                                         - 1 டம்பளர்
பயற்றம் (பாசி) பருப்பு              - கைபிடியால் 1 பிடி
முந்திரி பருப்பு                             - 50 கிராம்
ஏலக்காய்                                       -ஐந்தாறு
நெய்                                                  - 1/4 கிலோ 
திராட்சை பழம்                            - 50  கிராம் 
தேங்காய்                                       -  தேவையான அளவு
             முதலில் நெய்காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். 
              பாசி பருப்பை வாணலியில் போட்டு சிவப்பாக  வறுத்து அரிசியில் போட்டு இரண்டு மூன்று தரம் அரிசியை அலம்பி விட்டு பின் 4 டம்பளர் தண்ணீர் விட்டு அதனை குக்கரில் வைத்து மூடி விட வேண்டும்.  சாதம் வேக வைப்பது போலவே 7 அல்லது 8 விசில் சத்தம் வந்ததும் இறக்கி விட்டு கொஞ்சம் நேரம் கழித்து சாதத்தை எடுத்து அதில் வெல்லத்தை தட்டி போட வேண்டும்.  1 உருண்டை ( 1/4 கிலோ அல்லது 1/2 கிலோ) நல்ல சிவப்பு வெல்லமாக பார்த்து வாங்க வேண்டும்.  பின் அடுப்பில் சாதம் வெல்லம் சேர்த்து பார்த்திரத்தில் வைத்து கிளறி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  1 டம்பளர் காய்ச்சிய பால் விட வேண்டும்.  அடுப்பை சின்னதாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பொங்கல் கெட்டியாக வந்தவுடன் நெய் விட்டு கிளற வேண்டும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பையும், காய்ந்த திராட்சை பழத்தையும் வறுத்து போட வேண்டும்.  ஏலக்காய் பொடித்து போட வேண்டும்.  தேங்காய் பல்லு பல்லாக கீறிபோடலாம்.
ரவைப் பொங்கல் 

தேவையான பொருட்கள்

ரவை                                            - 1/2 கிலோ
பயற்றம் (பாசி) பருப்பு              - 200 கிராம்
முந்திரி பருப்பு                             - 50 கிராம்
மிளகு                                               - 1 ஸ்பூன்
சீரகம்                                                - 1 ஸ்பூன்
உப்பு                                                  - தேவையான அளவு
நெய்                                                  - தேவையான அளவு
இஞ்சி                                               - சிறு துண்டு 
கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, கறிவேப்பில்லை ஒரு கொத்து.
                        பாசி பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து கொள்ள வேண்டும்.  ஒரு வாணலியில் நெய் ஊற்ற வேண்டும். நெய் காய்ந்ததும், மிளகு சீரகத்தைப் போடவேண்டும். வெடித்ததும் முந்திரிப் பருப்பைப் போட வேண்டும்.  பிறகு மெல்லியதாகச் சீவிய இஞ்சித் துண்டுகளைப் போட வேண்டும்.  கறிவேப்பில்லையை போட்டு 3 டம்பளர் தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விட வேண்டும்.
(1 டம்பளர் ரவை எடுத்தால் 3 டம்பளர் தண்ணீர் விட வேண்டும்)

தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், ரவையைக் கொட்டிக் கட்டிவிடாமல் கிளறி விட வேண்டும். 
ரவை நன்றாக வெந்ததும், பாசிபருப்பை போட்டுக் கிளறி, எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு இறக்கி விட வேண்டும்.

Wednesday, January 19, 2011

வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி                                           - 1/2 கிலோ
பயற்றம் (பாசி) பருப்பு              - 200 கிராம்
முந்திரி பருப்பு                             - 100 கிராம்
மிளகு                                               - 1 ஸ்பூன்
சீரகம்                                                - 1 ஸ்பூன்
உப்பு                                                  - தேவையான அளவு
நெய்                                                  - தேவையான அளவு
இஞ்சி                                               - சிறு துண்டு
                        பாசி பருப்பை இரும்புசட்டியில் போட்டு சிவப்பாக வறுத்து அரிசியுடன் கலந்து நன்றாக அரிசியையும் பருப்பையும் கல் அரித்து இரண்டு மூன்று தரம் அலம்பிவிட்டு பாத்திரத்தில் போட்டு 6 டம்பளர் தண்ணீர் விட்டு (1 டம்பளர் அரிசி எடுத்தால் 3 டம்பளர் தண்ணீர் விட வேண்டும்.  பெருங்காயம், உப்பு, இஞ்சி, எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் வைக்கவேண்டும்.  
3 அல்லது 4 விசில் வந்தவுடன் இறக்கி வைத்து விடவேண்டும்.  ஒரு வாணலியில் நெய் ஊற்ற வேண்டும். நெய் காய்ந்ததும், மிளகை போடவேண்டும்.
மிளகு வெடிக்க தொடங்கியதும், சீரகத்தை போட்டு, உடனேயே முந்திரி பருப்பையும் சிறிதளவு கறிவேப்பிலையையும் போட வேண்டும்.
முந்திரி பருப்பு சிவந்ததும் இறக்கி பொங்கலில் ஊற்றி, நன்றாக கிளறி கொடுக்கவேண்டும்.

Saturday, January 15, 2011

சாத வகைகள்

கோதுமை சாதம்




கோதுமையில் சம்பா கோதுமை என ஒரு வகை உண்டு. அந்த கோதுமையைகொண்டு சாதம் சமைக்கலாம்.

சம்பா கோதுமையை ஒன்று இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும்.

அரிசி சாதம் தயார் செய்வது போலவே, கோதுமையை குக்கரில் சமைக்கவேண்டியதுதான். 1 டம்பளர் அரிசி எடுத்தால் 2 1/2 டம்பளர் தண்ணீர் விடவேண்டும். இரண்டு அல்லது மூன்று விசில் வந்ததும் இறக்கி விடவேண்டும்.

கோதுமை சாதம் நல்ல சத்துணவாகும்.

நோய்வாய்ப்பட்டு தேறியவர்களுக்கு உடல் ஊட்டம் பெற செய்ய கோதுமைசாதம் கொடுக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கும், இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்களுக்கும், கோதுமை சாதம் மிகச் சிறந்த உணவாகும்.